அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
அம்மன்: சவுந்தரநாயகி, அழகம்மை
பாடியவர்கள்: சம்பந்தர்
தேவாரப்பதிகம்
தோடுடையார் குழைக்காதில் சுடுபொடி யாரனலாடக் காடுடையார் எரிவீசும் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடையார் பொருளின்பம் நல்லவை நாளும் நயந்த பீடுடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே. -திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 53வது தலம்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.
தலபெருமை:நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.
லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு:புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்-புலி; பாதர்-கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது.
நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.
புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை. சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
போன்: +91- 94434 47826,+91- 94427 29856
No comments:
Post a Comment