Sunday, September 11, 2011

Agastheeswarar Temple at Villivakkam near Chennai

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: அகஸ்தீஸ்வரர்
அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை 

தல சிறப்பு:இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே இங்கு அம்பிகையை வேண்டிட குரு பார்வை கிடைக்கும், குருவால் உண்டாகும் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இத்தகைய அமைப்பைக் காண்பது அரிது. இங்கு தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை "செவ்வாய்கோயில்' என அழைக்கிறார்கள்.

தலபெருமை:அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்கநகைகள் அணிந்திருந்தாள். எனவே இவள், "ஸ்வர்ணாம்பிகை' எனப்படுகிறாள்.  இவளது சன்னதி முகப்பில் மகாலட்சுமி, சரஸ்வதி சன்னதியும், எதிரே நவக்கிரக மண்டபமும் உள்ளது.
வில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் இவ்வூர், "வில்லிவாக்கம்' என்றழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது அகத்தியர் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது.
ஐஸ்வர்ய வீரபத்திரர்: அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப்பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமிதோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது.
இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, "ஐஸ்வர்ய வீரபத்திரர்' என்று அழைக்கிறார்கள். செவ்வாய் கோயில்: நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, "செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

தல வரலாறு:
கைலாயத்தில் சிவன் திருமணம் நடந்தபோது, தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு வில்வலன், வாதாபி என்னும் சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்து விட்டார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூஜைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூஜைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அவரது தோஷத்தையும் போக்கினார்.
காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார்.

செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையுள்ளவர்கள், பயப்படும் குணம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர் அகஸ்தீஸ்வரர், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், வீரபத்திரருக்கு சந்தனக்காப்பிட்டு, வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

வைகாசி விசாகத்தையொட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், கார்த்திகையில் 1008 சங்காபிஷேகம், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.

போன்: +91- 44 - 2617 2326, 93832 01591



No comments:

Post a Comment