அருள்மிகு சோமேசர் திருக்கோயில்
அம்மன்:சோமகலாம்பிகை
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
தேவாரபதிகம் குண்டரைக் குணமில்லரைக் கூறையில் மிண்டரைத் துரந்த விமலன்றனை அண்டரைப் பழையாறை வடதளிக் கண்டரைத் தொழுது உய்ந்தன கைகளே.
-திருநாவுக்கரசர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 24வது தலம்.
தல சிறப்பு:இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கருடன் , ஆதிசேஷன் வழிபட்ட தலம். இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்.
தலபெருமை:சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம்.
அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.
கோயில்முன் மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்க்கை உருவமும் அழகுடையன.
பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது. இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1) நல்லூர் 2)வலஞ்சுழி 3) சத்திமுற்றம் 4) பட்டீச்சரம் 5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.
இங்குள்ள கைலாசநாதரை ராஜராஜசோழன் தினமும் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த கைலாச நாதரை வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.
முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்றுக் இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின.
கருடன் தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்கவும், கலைகளில் சிறந்து விளங்கவும், உடற்பிணி நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
போன்: +91 - 98945 69543
No comments:
Post a Comment