அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்தேவாரபதிகம்:
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர் கச்சிப் பொலி காமக்கொடி யுடன்கூடி இச்சித் திரும்பூளை யிடங் கொண்ட ஈசன் உச்சித் தலையில் பலி கொண்டு உழலூணே.
-திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம்.
தல வரலாறு:சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்.
இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள்.
குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது.
தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
விசுவாமித்திரர் வழிபட்ட தலம். ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களைக்காத்தபிரான் உள்ள தலம். இதனால் ஆலங்குடி என்றாயிற்று என்பர். இதற்குச் சான்றாகச் சொல்லப்படும் காளமேகப் புலவர் பாடல் வருமாறு :-
""ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம்
மடியாரோ மண் மீதினில்''.
இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.
கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும் ஆலங்குடி என்று பெயர்.
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்குரிய பரிவாரத் தலங்களில் இத்தலம் தட்சிணாமூர்த்தித் தலம்.
பஞ்ச ஆரண்யத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும்.
தட்சிணாமூர்த்தி இத்தலத்தின் சிறப்புக் கடவுளாக விளங்குகிறார். வியாழக்கிழமையில் இம்மூர்த்தியை வழிபடுவோர் எல்லா நலங்களும்
பெறுவர். நாகதோஷ முடையவர்கள் இத்தலத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகின்றன. தெட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான். தட்சன், சுந்தரர்: இக்கோயிலின் வெளியே தனிக்கோயிலில் பார்வதியின் தந்தையான தட்சன் சாபம் பெற்று ஆட்டுத்தலையுடன் காட்சியளிப்பதைக் காணலாம். இது மிகவும் சிறிய சிலை. தற்போது சற்று சேதமடைந்தது போல் தெளிவற்ற உருவத்துடன் உள்ளது. ஆனால், திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருக்க விரும்பாமல், ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும்
ஆலங்குடிக்கே திரும்பிய சுந்தரர் சிலை அற்புதமாக கோயிலுக்குள் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் இந்த சிலையும் இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் அம்மைத் தழும்புகள் சிலையில் இருப்பதைக் காணலாம்.
சுக்ரவார அம்பிகை: "சுக்ரவாரம்' என்றால் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷம் என்பது அறிந்த உண்மை தான். அந்த வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதி ஒன்றில் அழகே வடிவாக அம்பிகை அருள்பாலிக்கிறாள். இவளது பெயரும் "சுக்ரவார அம்பிகை' என்பது குறிப்பிட்டத்தக்கது.
மாதா, பிதா, குரு: இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம்.
இதன் பிறகு குரு சன்னதி வரும். மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. இத்தலத்தின் கிழக்கே "பூளைவள ஆறு' பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
போன்: +91-4374-269 407
No comments:
Post a Comment