அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்
அம்மன்:அஞ்சனாட்சி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்சாத்திரம் பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.
பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள்.
சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. பத்து கரங்களுடன் வல்லபை விநாயகரும் அனுக்கிரகம் புரிகிறார்.
தல வரலாறு:குபன் என்ற அரசனுக்காக திருமால் துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால், அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கிவிட்டது.
கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து, சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன், திருமாலின் பக்தியை சோதிக்க, பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்துவிட்டார்.
திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய, தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன், ""தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்த பூஜித்ததால், தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன். இதனால் உன்னை "பதுமாஷன்' என அழைப்பார்கள். இத்தலமும் "திருமாற்பேறு' என அழைக்கப்படும்'' எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார்.
மேலும் அவர் திருமாலிடம்,""நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்,''என்று அருளினார்.
இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.
பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment